அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நான்காவது மாதாந்த கூட்டம் இன்று தவிசாளர் ஏ.எஸ்.உவைஸ் தலைமையில் ஒன்று கூடியது.
தவிசாளர் கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றும் போது கடந்த காலங்களில் பிரதேச சபையில் கடமையாற்றுகின்ற ஊழியர்களுக்கு மத்திய அரசாங்கம் மாதாந்த சம்பளத்தை வழங்கியிருந்தது. ஆனால் இன்று பிரதேச சபையின் நிதியிலிருந்து இருபது வீதம் சம்பளத்திற்கு வழங்க வேண்டும். இது அடுத்த வருடம் அதிகரிக்கும் என தெரிவித்தார்
இப்படியான நிலையில் பிரதேச சபை வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்துவதன் மூலமே ஏனைய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும். அத்தோடு ஒலுவில் துறைமுகத்தில் சுதந்திர வர்த்தக வலயம் ஏற்படுத்தி அதன் மூலம் பெருவாரியான வருமானத்தை சபை பெற்றுக் கொள்ளும்.
எதிர்வருகின்ற மழைகாலத்தில் மழைநீர் வடிந்தோடுவதற்கு தடையாக உள்ள இடங்களை இனம்கண்டு அவற்றை புனரமைப்பு செய்யப்பட வேண்டும். தைக்கா நகர் பிரதேசத்தில் காணப்படுகின்ற பழைய கால்நடை அறுக்கும் கட்டிடத்தை அகற்றி அப் பிரதேசத்தில் பூங்கா அமைக்கப்பட வேண்டும்.
சபையின் சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டத்தரணிகள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும்.
ஆலம்குளம் பிரதேசத்தில் காணப்படுகின்ற சனசமூக நிலையத்தை மீள் புனரமைப்பு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறைச்சிக் கடைகள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பொது மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும். முறைகேடுகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் இறைச்சி கடைகளின் உரிமம் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்
பிரதேச சபைக்கு எதிராக அபாண்டங்களை சுமத்தும் தனிநபர்கள் மற்றும் ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
( ஏ.எல்.றமீஸ் )


கருத்துகள் இல்லை